Saturday 11 May 2013

தேசிய கட்சியின் மாநில செயலாளர் வருகை



தேசிய கட்சியின் மாநில செயலாளர் வருகை

              கோயம்புத்துார் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு.பி.ஆர்.நடராசன் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “மார்க்சிஸ்ட் கம்யுானிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு.ஜி.ராமகிருஷ்ணன் அய்யா அவர்கள் உங்கள் பள்ளியைப் பார்வையிட வருகை தருவதாகக் கூறியுள்ளார்” எனக்கூறினார்கள்.
            சுமார் ஒருவாரகால இடைவெளியில் மதிப்பிற்குரிய திரு.ஜி.ராமகிருஷ்ணன் அய்யா அவர்கள் தொடர்பு கொண்டு பள்ளியின் இருப்பிடம் குறித்தத் தகவல்களைக் கேட்டறிந்து, 20.03.2013 ஆம் நாள் பள்ளிக்கு வருகைபுரிந்தார்கள்.

திரு.ஜி.இராமகிருஷ்ணன் அவர்களை வரவேற்கும் கிராமக்கல்விக் குழு தலைவர் திரு.மகேஷ்.
பள்ளி குறித்த விளக்கங்களை அறிந்து கொள்ளும் திரு.ஜி.ஆர் அவர்கள்.

        பள்ளியின் வளர்ச்சி நிலைகள் குறித்தும், மாணவர்கள் கல்வி தரம் உட்பட பல்வேறு விளக்கங்களைக் கேட்டறிந்தார்கள். தலைமையாசிரியை, கிராமக்கல்விக் குழு  தலைவர், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்றார்.
          சுமார் ஒரு மணிநேரத்திற்கும் கூடுதலாக பள்ளியில் இருந்தவர், இறுதியாக இரண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

 மாணவி வி.வினிதாவுடன் உரையாடுகிறார்.
 
முதலாவதாது கருத்தை ஒரு சிறுகதையின் மூலம் கூறினார்,
               “சமீபத்தில் சிறுகதை ஒன்றினைப் படித்தேன். மதுரையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருந்த அந்த சிறுகதையில், ஒரு ஏழை விதவைத்தாயின் ஒரே மகன் பள்ளியில் படித்து வருகிறான். அப்பள்ளியில் ஆண்டுதோரும் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வார்கள். இவ்வாண்டு மதுரையைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய அவ்வகுப்பு ஆசிரியர், பயணக்கட்டணமாக ரூ.100 கொடுக்க வேண்டும் என்று கூறியவர் திங்கள் கிழமை வரும்போது உங்கள் பெற்றோரிடம் கேட்டு வாருங்கள்.முதலில் பெயரைக் கொடுத்து விடுங்கள். ஒரு வாரத்திற்குள் பணம் கொடுத்தால் போதும் என்று கூறுகிறார். அம்மாணவனுக்கும் ஆவல் ஏற்பட்டு தன் தாயிடன் கேட்டான். குழந்தையின் விருப்பத்தினை அறிந்த அந்த ஏழைத்தாய் உன் பெயரையும் கொடுத்துவிடு அடுத்தவாரத்திற்குள்ளாக நாம் பணத்தினைக் கட்டிவிடலாம் என்று கூறுகிறாள். அம்மாணவனும் தனது பெயரையும் பதிவு செய்து மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தான். இரண்டு நாள்களுக்குப்பின் அவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் வழியிலுள்ள செங்கல் சுாளையைத்தாண்டி வந்து கொண்டிருக்கையில், நடக்க முடியாதபடி ஆடைகள்,உடல் என அனைத்தின் மீதும் செம்மண்படிந்த நிலையில் ஒருவர் தள்ளாடிச் செல்வதைப் பார்க்கிறான் அச்சிறுவன். தன் அம்மாவைப் போன்றதொரு சாயலாகத் தெரிந்ததால் சற்று அருகில் செல்கிறான். தன் அம்மாவேதான் என்பதை உறுதி செய்து கொண்ட அச்சிறுவன்,அருகிலிருந்த மரத்தின் மறைவில் நிற்று தன் அம்மா எப்படி கஷ்டப்படுகிறாள் என்பதைப் பார்த்து கண்ணீர் சிந்துகிறான். தன் அம்மா தன்னை கவனிக்காதவாறு வீட்டிற்குச் சென்றுவிட்டான். அந்த வார இறுதியில் அவன் தாய் பெற்று வந்த கூலிப்பணத்திலிருந்து ரூ.100 எடுத்து அச்சிறுவனிடன் மிக மகிழ்ச்சியுடன் கொடுத்தாள்.அச்சிறுவனோ பணத்தை வாங்க மறுத்து எனக்கு வேண்டாம் என்றான்.தாயுக்கோ மிகுந்த கவலை. ஏன் வாங்க மறுக்கிறாய்? என மீண்டும் மீண்டும் கேட்க இறுதியில் அச்சிறுவன் உங்கள் வேலையின் சிரமத்தை நான் அறிந்து கொண்டேன் என நடந்தவற்றினைத் தன் தாயிடன் கூறுகிறான். அவனைக்கட்டி அணைத்த தாய் கண்ணீர் சிந்துகிறாள்”
             பொதுவாக இதுபோன்று ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளே அரசு பள்ளிகளுக்கு வருகின்றனர். ஏழை மக்களின் தரம் உயர உங்களைப் போன்ற ஆசிரியர்களின் பங்களிப்பே முக்கியமானதாக விளங்குகின்றன. அந்த வகையில் உங்கள் பணி தொடரட்டும்.

ஆசிரியர்களிடம் தனது கருத்தினைப் பகிர்ந்து கொள்கிறார் திரு.ஜி.ஆர் அவர்கள்.
 
இரண்டாவது,  
              பொதுவாக பெரும்பாலானோர் பணியினை நேசித்துப் பணியாற்றுகின்றனர். ஆனால், குடும்பத்தை முதன்மைப்படுத்தி அடுத்ததாகவே பணியினைக் கருதுவர். ஒரு சிலர் பணியினை முதன்மைப்படுத்தி, குடும்பத்தை அடுத்ததாகக் கருதுவர். உங்கள் பணி இரண்டாவதைப் போன்றது, என்று கூறி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
திரு.ஜி.இராமகிருஷ்ணன் அவர்களுடன் குழந்தைகள்.
         மதிப்பிற்குரிய ஜி.ராமகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கு எம் பள்ளி, கிராமக்கல்விக்குழு மற்றும் இராமம்பாளையம் ஊர் பொது மக்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

தனது கருத்தைப் பதிவு செய்கிறார் திரு.ஜி.ஆர் அவர்கள்.
 

பதிவு : பிராங்கிளின்.

2 comments:

  1. Really a very good move. I appreciate Franklin and Saraswathi for their beautiful effort. Well done...

    ReplyDelete
  2. அற்புதம்..அழகு..வாழ்த்துக்கள்...இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநிலத்தலைவர்,கொங்குதமிழர்கட்சி மற்றும் தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகம் http://theeranchinnamalai.blogspot.in, http://kongutamilar.blgospot.in, http://facebook.com/theeran.samy

    ReplyDelete

Note: only a member of this blog may post a comment.